கடந்த சில நாட்களுக்கு முன்னால் எனது மனைவி நமது நாட்டு சமையல்
சாமான்களுக்கான ஒரு பட்டியலைக் கொடுத்து எமது வதிவிடத்துக்கண்மையில்
அமைந்துள்ள தமிழ்க்கடைதனில் சில பொருட்களை வாங்கி வரும்படி
கேட்டிருந்தாள்.
அது மட்டுமின்றி ஈழத்திலே எனது உடன்பிறவாச் சகோதரனின் குடும்பத்திற்கு
நான் அனுப்பும் மாதாந்த பணத்தொகையையும் அந்தக்கடையினூடகவே அனுப்புவது
வழக்கம்.
நாம் இங்கிலாந்து ஸ்ரெலிங் பவுண்ஸ் பணத்தை அக்கடையில் கையளித்தால், நாம்
கையளிக்கும் போது அந்தத் தொகையின் மதிப்பு ஈழத்து ரூபாயில் எவ்வளவு
ஆகிறதோ அந்தத் தொகையை அடுத்தநாள் யாழ்ப்பாணத்திலுள்ள அவர்களுடைய
பங்குதாரக் கடையிலிருந்து எமக்கு வேண்டியவர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
அதற்கான பற்றுச்சீட்டையும் கொடுத்து விடுவார்கள்.
அன்று நான் வழமை போல எனது மனைவியின் பட்டியலில் இருந்த பொருட்களை வாங்கி
விட்டு ஊருக்கு பணம் அனுப்புவதற்கான கவுண்டரில் சென்று அங்கு
அமர்ந்திருந்த அந்தத் தங்கையிடம் எனது தேவையைத் தெரிவித்தேன்.
அங்கே நான் பேசிக்கொண்டிருக்கையில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க ஒரு
வயதான தமிழ்ப் பெண்மணி மிகவும் பணிவான புன்முறுவலுடன் என்னை நோக்கி
வந்தார்.
அவர் என்னை நெருங்கும் போது மிகவும் தயக்கத்துடன் நெருங்கினார். அந்தப்
பெண்மணியைக் கண்டதும் என் கண்கள் ஒரு கணம் கலங்கி விட்டது.
காரணம் ? அவர் எனக்கு என் அன்னையை நினைவூட்டியமையே. அருகில் நெருங்கிய
அவர், ஈழத்தமிழில்
“ தம்பி உப்ப ஒரு பவுண்டுக்கு அங்கை எத்தினை ரூவாயாம் குடுக்கினம் ” என
கண்கள் பளிச்சிட என்னிடம் வினவினார்.
நான் அதற்கான விடையை அவருக்குக் கூறிவிட்டு எனது காரியத்தில் மீண்டும்
இறங்கி விட்டேன்.
அவரைப் பற்றிய ஞாபகம் எனக்கு அந்த ஒரு கணம் மறந்து விட்டது. எனது அலுவலை
முடித்துக் கொண்டு கடையை விட்டு வெளியேறும் தறுவாயில் அதே ” அம்மா
” மீண்டும் அவசரமாக என்னை நோக்கி ஓடி வருவதைக் கண்டேன்.
எனது வேகத்தைக் குறைத்தேன். மீண்டும் ஈழத்தமிழ் கொஞ்சியது,
“ தம்பி, நீங்கள் எவ்வளவு காசு அனுப்பியிருப்பியள்? ஒரு ஆயிரம்
பவுண்ட்ஸ் ? “ மீண்டும் கண்களில் ஆவல் ததும்ப, முகம் அகலமாய் விரிய
அந்தத்தாய் என்னைக் கேட்டார்.
நான் சிரித்தவாறே ” இல்லை அம்மா, அவ்வளவு அனுப்பு ஏலாது, ஒரு நூறு
பவுண்ட்ஸ் அனுப்பினனான் ” என்றேன்.
அப்போது அவர் கொஞ்சம் சாவகாசமடைந்தவராக,
“ தம்பி நீங்க ஊரில எவடம் ? “ என்றார் அம்மா.
“ யாழ்ப்பாணத்தில நல்லூருக்குப் பக்கத்தில கயிலாய பிள்ளையார் கோயிலடி “
என்றேன்.
“ ஓமோம் தம்பி, எனக்குத் தெரியும் அந்த இடம் ” என்றார் அத்தாய் மிகவும்
மகிழ்ச்சியுடன்.
நான் கடையை விட்டு வெளியே வரும்போது அவரும் என்னுடன் சேர்ந்து வெளியே
நடந்தார். அவரின் நடையிலிருந்த வேகம் அவருக்கு என்னுடன் உரையாடலை
மீண்டும் தொடர ஆவல் என்று காட்டியது.
ஆனால் எனக்கோ பாழாய்ப்போன வேலைக்குப் போக வேண்டிய அவசரம், அந்தத் தாயின்
ஆவலை முறித்துக் கொண்டு செல்ல வேண்டிய காலக்கட்டாயம்.
காரில் உட்கார்ந்திருந்த எனக்கு வழியெல்லாம் அந்தத்தாயின் ஆவல் ததும்பிய
முகமும், அவருடன் பேசமுடியாது நான் புறப்பட வேண்டி வந்த போது அதிலே
தென்பட்ட ஏமாற்றமும் மாறி, மாறி மனதில் வந்து வந்து முட்டியது.
என் தாயே அவர் உருவில் என்னுடன் உரையாட வந்தது போன்ற ஏதோ ஒரு இனம்புரியாத
உணர்வு என்னைத்தாக்கியது.
எனது மண்ணில் நடந்த போராட்டத்தின் விளைவுகளால் வந்த தாக்கத்தைச் சிறிது
எண்ணிப்பார்த்தேன். இவரைப் போல எத்தனையோ வயதானவர்கள் பாதுகாப்பற்ற
சூழலினால் புலம்பெயர்ந்து இன்று லண்டனிலே வாழ்கிறார்கள்.
அவர்கள் இழந்தது அவர்களின் மண்ணை மட்டுமா? இல்லையே அவர்களின் மகிழ்வான
வாழ்வையும் கூடத்தான்.
ஈழத்திலே வாழும் மட்டும் சுற்றுப்புறச் சொந்தங்களுடன் அல்லும் பகலும்
உறவாடி விரும்பிய பொழுதுகளில் விரும்பிய இடங்களுக்குச் சுதந்திரமாக
சென்று வாழ்ந்து பழகியவர்கள் இன்று அந்நிய தேசங்களிலே அந்தந்த நாட்டுக்
கலாச்சாரச் சிறைகளிலே மனமுடைந்த கைதிகளைப் போல் வாழ்கின்ற நிலை என்
கண்களை ஈரமாக்கின.
உண்மையாகவே வாழமுடியாமல் வந்தவர்கள் பலர் இருக்கிறார்கள் அதை
மறுப்பதற்கில்லை. ஆனால் அங்கு வாழக்கூடிய வசதிகள் இருந்தும் புலம்பெயர்
நாடுகளில் வாழும் தமது பிள்ளைகளின் வறட்டுக் கெளரவத்தைக் காப்பதற்காக
எத்தனை பெற்றோர் தமது சுதந்திரத்தை அடகு வைத்து விட்டார்கள்.
உதாரணத்துக்கு நான் எனது பெற்றோரையே எடுத்துக் கொள்கிறேன். ஈழத்தில்
யாழ்ப்பாணத்தில் வாழ்ந்து வந்த அவர்கள் வசித்த வீட்டின் மீது இலங்கை
இராணுவத்தால் குண்டு வீசப்பட்ட போது என் தந்தை மயிரிழையில் உயிர்
தப்பினார்.
அதன் பின்பு அவர்கள் எனது அண்ணன் வீட்டில் வைத்து
பராமரிக்கப்பட்டார்கள். அவர்கள் இன்னும் பாதுகாப்பாக வாழட்டுமே என்று
அவர்களைத் தலைநகர் கொழும்புக்கு இடம் மாற்றினோம். அங்கு ஒரு வாடகை
வீட்டில் அன்னையும், தந்தையும் வசித்து வந்தார்கள்.
ஆனால் மிகவும் மகிழ்ச்சியாகத்தான் இருந்தார்கள். பிள்ளைகள் வெளிநாட்டில்
வசித்தபோது பணத்துக்கு அவர்களுக்கு குறைவே இருக்கவில்லை. மிகவும்
சுதந்திரமாக நண்பர்கள், உறவினர்கள் என்று அனைவரையும் தமக்கு விரும்பிய
பொழுதுகளிலே சென்று சந்திப்பார்கள்.
கொழும்பில் அருகிலிருக்கும் இந்துக் கோவில்களுக்கு விரும்பிய பொழுது
சென்று வருவார்கள்.
என் தந்தை இலங்கை நீர்ப்பாசனத் திணைக்களத்தில் பொறியிலாளராகக்
கடைமையாற்றி ஓய்வு பெற்றவர். அவரது பொறியிலாளர் சங்கக் கூட்டங்கள்ள்
அனைத்திலும் ஆர்வமாகக் கலந்து கொள்வார்.
தனது ஓய்வூதியம் சம்மந்தமான விடயங்கள் அனைதையும் தானே கவனித்து வந்தார்.
அதிலே அவரது நிர்வாகத் திறமைகள் மழுங்கடிக்கப்படாமல் இருந்தன.
ஆனால் மகன் லண்டனிலே, மற்றும் பிள்ளைகள் வெளிநாட்டிலே, பாவம் இவர்கள்
வாடகை வீட்டில் இருந்து கஷ்டப்படுகிறார்களே ! என்று அவர்கள் சொல்லவில்லை.
ஊர் சொன்னது. ஆமாம் வெளிநாட்டில் விடுமுறைக்காக கொழும்பு செல்லும்
உறவினர்கள் இவர்களைப் பார்த்து விட்டு வருவார்கள்.
பின்பு தொலைபேசியில் என்னிடமும் என் சகோதரர்களிடமும் ” ஜயோ பாவம்
யாழ்ப்பாணத்தில் ராஜா, ராணி போல இருந்தார்களே ! இங்கே வாடகை சவீட்டிலே
கஷ்டப்படுகிறார்கள் ” என்று தாம் கண்டதுக்கு கையும், காலும் வைத்து
மிகைப்படுத்திச் சொல்லி விடுவார்கள்.
ஆக மொத்தம் சமுதாயத்தின் அடிப்படையற்ற அமுக்கத்திற்காக நாம் எமது தாய்,
தந்தையரின் சுதந்திரத்தை பறித்து விட்டோம்.
அரைமனதுடன் வரச் சம்மதித்த என் தாயையும், வரவே பிடிக்காத என் தந்தையையும்
வலுக்கட்டாயமாக இங்கிலாந்துக்கு அழைத்து, கிளிகளைத் தங்கக்கூட்டிலே
அடைப்பது போல அடைத்ததுதான் மிஞ்சியது.
புலம்பெயர் அவசர வாழ்க்கையிலே அவர்களுக்கு தம் உறவுகளுடன் பேசுவதற்குக்
கூடச் சந்தர்ப்பம் கிடைக்காதா? பேசுவதற்கு யாராவது வரமாட்டார்களா என்று
ஏங்குவார்கள்.
வெளியே ஓரிடமும் தனியாச் சென்று வர உகந்த கலாச்சாரமல்ல புலம்பெயர்
கலாச்சாரம். அதனலே பிள்ளைகளாகிய நாம் எங்கேயாவது கூட்டிப்போனல் தவிர
அவர்களால் ஒரு இடமும் சென்று வரமுடியாத நிலை.
இதனால் அவர்களின் வாழ்க்கைக் காலத்திலே ஒரு ஜந்து வருடத்தை
இழந்திருபார்கள் என்பது எனது கணிப்பு.
எவ்வளவுதான் சுதந்திரமான , சுயாதீனமான எண்ணங்கள் மனதுக்குள் இருந்தாலும்,
சமுதாயம் என்னும் சகதிக்குள் புரளும் போது அனைவரும் எருமைகளாகி விடுவது
தவிர்க்கப்படமுடியாத செயலாகிவிடுகிறது.
அது தவிர அவர்களுக்கென தனியாக ஒரு வாழ்விடம் அமைத்துக் கொடுத்து கொஞ்சம்
சுதந்திரத்தை அளிக்க முற்பட்டால் அதுவும் கூட சமுதாயத்தின் கண்களில்
பாபச் செயல்களாகி விடுகிறது.
அன்று அந்தக் கடையிலே என்னுடன் பேசத்துடித்த அந்தத்தாயார் கூட
பேச்சுத்துணைக்கு தன்க்கு யாராவது கிடைக்க மாட்டார்களா? என்று ஏங்கி அந்த
வாசலில் தவம் கிடக்கிறார் போலும்.
என்னுள்ளத்து உணர்வுகளை வடிக்க ஒரு கட்டுரை போதாது ஓராயிரம் கட்டுரைகள்
வேண்டும்.
உறுத்தும் உணர்வுகள் உணர்த்தும் உண்மைகள் காலம் கடந்த பாடங்களாகின்றன.
அன்புடன்
சக்தி
