என்றோ என் மனதில் பூத்ததொரு தாமரை. நினைவுகளின் தடமாக, ஆசைகளின் வழியாக தமிழ் என்னும் ஊற்று நதியாகிப் பாய்ந்த போது நெஞ்சத்தில் பூத்ததந்த ஏக்கம்.
எத்தனையோ இதழ்களைப் படிக்கிறோம், ஒவ்வொன்றிலும் ஏதாவது ஒரு பகுதி எமது நெஞ்சைத் தொட்டு நிற்கிறது. இப்படி எனது மனதுக்கு பிடித்தவைகளை யாராவது கோர்த்து ஒரு தொகுப்பாக எனக்குக் கொடுக்க மாட்டார்களா ? என்றொரு ஏக்கம்.
அந்த ஏக்கமே “தமிழ்ப்பூங்கா” என்ற மின்னிதழுக்கு அடிவகுத்தது. நான் தொகுத்து வழங்கும் அந்த இதழ் அனைவருக்கும் பிடித்ததாக இருக்கும் என்று எண்ணவில்லை ஆனால் அனைவராலும் ரசிக்கக்கூடிய ஏதாவது ஒரு தொகுப்பு அதிலிருக்கும் என்பது எனது நம்பிக்கை.
தமிழ்ப்பூங்காவின் இணையத்தளமாக ஆரம்பிக்கும், இந்த இணையத்தளத்தில் இன்னும் பல பக்கங்களை இணைத்து இதை மேலும் விரிவடையச் செய்வதே எனது லட்சியம்.
எனது லட்சியப்பயணத்தில் நீங்களும் கூட வருவீர்கள் என உளமார நம்புகிறேன்.
அன்புடன்
சக்தி
_________________________________________________________________________________
